பிக்பாஸ் தர்ஷன், லாஸ்லியாவை தெரிந்த உங்களுக்கு இந்த 3 ஈழத் தமிழரை தெரியுமா? வைரலாகும் குமுறல் பதிவு

பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்றுள்ள லாஸ்லியா, தர்ஷன் ஆகிய ஈழத் தமிழர்களை அறிந்து கொண்ட தமிழகம், பாஸ்கரன், ரமேஷ், செல்வம் என்கிற 3 ஈழத் தமிழர்க...

பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்றுள்ள லாஸ்லியா, தர்ஷன் ஆகிய ஈழத் தமிழர்களை அறிந்து கொண்ட தமிழகம், பாஸ்கரன், ரமேஷ், செல்வம் என்கிற 3 ஈழத் தமிழர்களைப் பற்றி தெரிந்து கொண்டதா? என குமுறல் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெளிநாடுகளில் அதிக பார்வையாளர்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஈழத் தமிழர்கள் 2 பேரை இம்முறை களமிறக்கிவிட்டிருக்கிறது விஜய் டிவி. பிக்பாஸ் சீசன் 3-ல் ஈழத் தமிழ் செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

இது அப்பட்டமான வணிக நோக்கம்தான் என்கிற விமர்சனம் ஒருபக்கம் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் இன்னமும் சிறப்பு முகாம்களில் போராடும் ஈழத் தமிழர்களையும் தர்ஷன், லாஸ்லியாவையும் முன்வைத்து முன்னாள் போராளி பாலன் சந்திரன் எழுதிய பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அப்பதிவு விவரம்:

3 ஈழத் தமிழர் போராட்டம்

தர்ஷன், லொஸ்லியா, பாஸ்கரன், ரமேஷ், செல்வம் அனைவரும் ஈழத் தமிழர்கள். இதில் தர்ஷன், லொஸ்லியா இருவரும் பிக்பாஸ் நிகழ்வில் கலந்துகொள்வதால் விஜய் ரிவி மூலம் பல கோடி தமிழர்கள் நேற்று முதல் அறிந்துள்ளனர். இந்த இருவரையும் அறிந்துள்ள பல தமிழர்களுக்கு பாஸ்கரன், ரமேஷ், செல்வம் ஆகியோர் யார் என்று தெரிந்திருக்கவில்லை.

விடுதலை கோரி வைகோ அறிக்கை

ஆனால் வைகோ அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. திருச்சி சிறப்புமுகாமில் இந்த மூவரும் கடந்த ஜந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்கள் என்பதும் தெரிந்திருக்கிறது. தெரிந்தது மட்டுமன்றி இந்த அப்பாவி ஈழ அகதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு அவர் அறிக்கை விட்டிருக்கிறார்.

வைகோ மீது வழக்கு

வைகோ அவர்கள் எம்.பி இல்லை. அவர் கட்சி ஆட்சியிலும் இல்லை. ஆனாலும் அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அறிக்கை விட்டிருக்கிறார். இப்போது தேர்தல் இல்லை. இருந்தாலும் ஈழத் தமிழர் பற்றி பேசுவதால் அது வைகோ அவர்களுக்கு பயன் தரப்போவதில்லை. இருந்தாலும் அவர் அறிக்கை விட்டிருக்கிறார். அதுவும் 2008ம் ஆண்டு ஈழத் தமிழர்களுக்காக பேசியதற்காக அவர்மீது போடப்பட்ட தேசவிரோத வழக்கு விசாரணை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க மறுபுறம் அது பற்றி கவலைப்படாமல் மீண்டும் ஈழத் தமிழர்களுக்காக அறிக்கை விட்டிருக்கிறார். அண்மையில் ஈழத்தில் இருந்து தமிழ் தலைவரான மாவை சேனாதிராசா தமிழகம் வந்து ஸ்டாலின் அவர்களை சந்தித்தார். இதே ஸ்டாலினை ஈழத்திற்கு வரும்படி முன்னாள் மாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரன் அழைத்திருக்கிறார்.

முன்வைக்கப்படாத விடுதலை கோரிக்கை

இந்த ஈழத் தமிழ் தலைவர்களும் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு இந்திய அரசிடம் கோரவில்லை. அல்லது, இந்திய அரசை வலியுறுத்தும்படி தாங்கள் சந்தித்த ஸ்டாலின் அவர்களிடமும் கோரவில்லை. ஆனால் யார் கேட்காமலும், எந்தவித பயனும் எதிர் பாராமல் வைகோ அவர்கள் அறிக்கை விட்டிருக்கிறார்.

இந்திய இலங்கை அரசு எண்ணம்

பிக்பாஸ் பார்ப்பவர்கள் " இப்போது ஈழத்தில் யுத்தம் இல்லை. அந்த தமிழர்கள் இந்தியா வந்து டிவி நிகழ்வுகளில் சந்தோஷமாக கலந்து கொள்கிறார்கள். அதற்கு இலங்கை இந்திய அரசுகள்கூட அனுமதிக்கின்றன" என்றே நினைப்பார்கள். அவ்வாறு உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் நினைக்க வேண்டும் என்பதே இலங்கை மற்றும் இந்திய அரசின் விருப்பமாகும். அதற்கு விஜய் டிவி யும் ஒத்துழைக்கிறது.

ஊடகங்கள் மறைக்கும் ஈழ அவலங்கள்

ஆனால் தமிழ்நாட்டில் சிறப்புமுகாமில் ஈழ அகதிகள் அடைக்கப்பட்டிருப்பதையோ அல்லது ஈழத்தில் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டங்களையோ உலகத் தமிழர் அறிந்து கொள்வதை இந்த அரசுகள் விரும்புவதில்லை. அதனால்தான் பிக்பாஸ் மற்றும் சுப்பர் சிங்கர் நிகழ்வில் ஈழத் தமிழர்களை காட்டும் விஜய் டிவி போன்றன தமிழ் நாட்டில் ஈழ அகதிகள் படும் துன்பத்தையும் காட்டுவதில்லை. ஈழத்தில் அவர்களின் அவலத்தையும் காட்டுவதில்லை. இந்நிலையில் வைகோ அவர்களின் அறிக்கை ஈழத் தமிழர்களின் உண்மை நிலையை வெளி உலகிற்கு காட்டியுள்ளது.

மேலும் பல...

0 comments

Blog Archive