காளி விமர்சனம் -பெண் இயக்குனர்கள் வதவதவென வருகிறார்கள். ஆனால், இறுதிச்சுற்றும், விக்ரம் வேதாவும் எப்போதாவதுதான் வருகின்றன!

அள்ள அள்ள குறையாத அம்மா சென்ட்டிமென்ட் கதைகளில், ‘பிச்சைக்காரன்’ படம்தான் பெஸ்ட்டோ பெஸ்ட்! பாதி ராத்திரியில் எழுப்பி கால்ஷீட் பேப்பரில் கைய...

அள்ள அள்ள குறையாத அம்மா சென்ட்டிமென்ட் கதைகளில், ‘பிச்சைக்காரன்’ படம்தான் பெஸ்ட்டோ பெஸ்ட்! பாதி ராத்திரியில் எழுப்பி கால்ஷீட் பேப்பரில் கையெழுத்து கேட்டாலும், ‘அம்மா’ன்னு சொன்னா சும்மாவே போடுவார் விஜய் ஆன்ட்டனி. அது போதாதா? ஆளை ஒரே அமுக்காக அமுக்கியிருக்கிறார்கள். ‘அம்ம்ம்ம்ம்…ஆவ்’ என்று அலறவிட்டிருக்கிறார் கிருத்திகா உதயநிதி!

அமெரிக்காவில் டாக்டராக இருக்கும் விஜய் ஆன்ட்டனிக்கு ஓயாமல் வருகிறது ஒரு கனவு. மாடு முட்டுவது போலவும், பாம்பு விழுங்க வருவது போலவுமான ரிப்பீட் அது. கனவின் சுவடு தேடி கிளம்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான் அந்த உண்மையை ‘பொதுக்கடீர்’ என்று போட்டு உடைக்கிறார் அவரது வளர்த்த அப்பா. “நீ எங்களுக்கு பொறக்கலேப்பா. உன் அம்மாவே வேற…”

எலும்பே உடைஞ்சுருச்சுப்பா… என்கிற அளவுக்கு அழுத்தமான அந்த காட்சியில், ‘பிளாஸ்த்ரி போட்டுக்குறேன்பா’ ரேஞ்சில் ரீயாக்ஷன் கொடுத்துவிட்டு இந்தியாவுக்கு வருகிறார் டாக்டர் விஜய் ஆன்ட்டனி. வந்த இடத்தில் நடக்கிற சம்பவங்கள்தான் காளி.

‘எனக்கு நடிக்கவே வராது’ என்று பலமுறை தன் பேட்டிகளில் கூறிவிட்டார் விஜய் ஆன்ட்டனி. அதனால் அவரது நடிப்பை பற்றி பேசுவது பெரும் தவறு என்பதால் அவரது ஆக்ஷன் அவதாரத்தை சிலாகித்தபடி தொடரலாம். படத்தில் வருகிற அத்தனை பைட் காட்சிகளிலும் நரம்பு புடைக்கிறது நமக்கு. பிரித்து மேய்ந்திருக்கிறார் ஹீரோ. அதிலும், காட்டுக்குள் நடக்கிற அந்த பைட் மரண மாஸ்! லேசாக முகத்தை சிவப்புத்துணியால் மூடி, கண் மட்டும் தெரிகிற அந்த ஸ்டைலில் அள்ளுகிறார் மனுஷன். இவருக்கும் ஷில்பாவுக்குமான அந்த லவ் கூட அழகோ அழகு.

லோக்கல் டாக்டர்(?) அஞ்சலி, புதுசாக வந்திருக்கும் அமெரிக்க டாக்டரை நினைத்து மிரளுவதெல்லாம் இயல்புதான். மெல்ல டாக்டரின் வலைக்குள் விழுந்து அவரையே கட்டிக்கொள்ள ஆசைப்படும் அஞ்சலி, இப்பவும் அதே அழகோடு இருப்பது மார்கண்டேய யோகம். கடைசிவரை தன் டாக்டர் கெத்தை விட்டுக்கொடுக்கலையே, அங்க நிக்கிறீங்க அஞ்சுஸ்!

படத்தில் யார் பிளாஷ்பேக்கினாலும், அதில் வரும் கேரக்டர் ஆம்பளையாக இருந்தால் விஜய் ஆன்ட்டனி வந்துவிடுகிறார். (இந்தப்படத்தின் புதுமையே அதுதான்) அப்படி மதுசூதனன் பிளாஷ்பேக்கில் வரும் விஜய் ஆன்ட்டனியை காதலிக்கும் அம்ரிதா, சற்று ‘தாராள’ போக்கை கடைபிடித்திருக்கிறார். செம ரிலாக்ஸ்ம்மா!

சுனைனா வருகிற அந்த பிளாஷ்பேக், அந்த கால எம்ஜிஆர், நம்பியார் படங்களையெல்லாம் ஞாபகப்படுத்திவிட்டுப் போகிறது. கிருத்திகா உதயநிதியை இந்த கால யூத் என்று நினைத்தால், அவர், கலைஞர் காலத்து கதைப் பெட்டகமாக இருக்கிறார். ஹய்யோ… ம் சுனைனாவுக்கு வருவோம். கதையின் அழுத்தமான கேரக்டரே இவர்தான். அதை உணர்ந்து நடித்திருக்கிறார். ‘அந்த தப்புக்கு முழு காரணமும் நான்தான்’ என்று ஒப்புக் கொண்டு பாரம் சுமப்பது நெகிழ்ச்சி நேரங்கள்!

நல்லவேளை… யோகிபாபு இருந்தார். இல்லையென்றால் இந்தப்படத்தை நினைத்துப் பார்க்கவே குலை நடுங்குகிறது!

நடிகராக ஆங்காங்கே வெண்ணை வழுக்கினாலும், இசையமைப்பாளராக தன் ‘கிரிப்’பை விட்டுக் கொடுக்கவே இல்லை விஜய் ஆன்ட்டனி. அரும்பே… யுகம் நூறாய்… மனுஷா வா முன்னேற… ஆகிய பாடல்கள் அப்படியே மனசில் பதியும் மருதாணி அச்சு.

படத்தில் ஆங்காங்கே வருகிற பிளாஷ்பேக் காட்சிகளில், நிறைய வித்தியாசத்தை கொண்டு வர முயன்று அதில் வெற்றியும் பெற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன்.

பெண் இயக்குனர்கள் வதவதவென வருகிறார்கள். ஆனால், இறுதிச்சுற்றும், விக்ரம் வேதாவும் எப்போதாவதுதான் வருகின்றன!

மேலும் பல...

0 comments

Blog Archive