``உன் கர்ப்பத்தில் சாவித்திரி பிறந்திருக்கிறாள்!" நெகிழும் கீர்த்தி சுரேஷ் அம்மா

'நடிகையர் திலகம்' திரைப்படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்துள்ளதாக நடிகை கீர்த்தி சுரேஷூக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிகின்றன. ம...

'நடிகையர் திலகம்' திரைப்படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்துள்ளதாக நடிகை கீர்த்தி சுரேஷூக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிகின்றன. மகளுக்குக் கிடைக்கும் பாராட்டுகளால், கீர்த்தியின் அம்மாவும் நடிகையுமான மேனகா சுரேஷ் பூரிப்புடன் பேசுகிறார்.

``தினம் தினம் கீர்த்திக்கான பாராட்டு மழையில் நனைஞ்சுட்டிருக்கேன். 'உன் கர்ப்பத்தில் சாவித்திரியே பிறந்திருக்கிறாள். நீ புண்ணியம் பண்ணியிருக்கே'னு பாராட்டறாங்க. சாவித்திரி அம்மாவின் பயோபிக்ல நடிக்கும் வாய்ப்பு வந்ததும், ஆயிரம் முறைக்கு மேலேயே கீர்த்தி யோசிச்சாள். அப்போ, கீர்த்தி மேல் வைக்கப்பட்ட அடுக்கடுக்கான விமர்சனங்களால், எனக்கும் பயமும் கவலையும் இருந்துச்சு. ஆனாலும், 'உன்னால் முடியும்னு நம்பிக்கை இருந்தால் நடி. எந்த விமர்சனத்தையும் கண்டுக்காதே'னு சொன்னேன். ஒருமுறை மட்டும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனேன். 'எழுந்திரிங்கம்மா'னு சாவித்திரியை, குழந்தை எழுப்புற மாதிரி படத்தில் வரும் காட்சியைப் படமாக்கிட்டு இருந்தாங்க. அந்தக் காட்சியால் சாவித்திரி அம்மாவின் நியாபகம் வந்து ஃபீல் பண்ணினேன். அதனால், உடனே திரும்பி வந்துட்டேன். பிறகு, ஷூட்டிங் பக்கம் போகவேயில்லை.

கொஞ்ச நாள் கழிச்சு, 'ஏதாச்சும் போட்டோஸைக் காட்டு. உன் மேக்கப், காஸ்ட்யூம் காட்டு'னு கேட்டேன். படத்தின் டீசர் ரிலீஸானபோதும் கேட்டேன். ஆனா, படத்தைப் பற்றிய விஷயங்களை ஷேர் பண்ணிக்க மறுத்தாள். 'போட்டோஸ் உள்பட எதையும் இப்போ பார்க்க வேண்டாம். படம் ரிலீஸாகும்போது பாருங்க. உங்க கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்'னு சொல்லிட்டாள். என்கிட்ட மட்டுமில்லை, வேற யார்கிட்டயும் படத்தைப் பற்றி கீர்த்தி எதையும் பேசிக்கலை" என்கிற மேனகா, நடிகை சாவித்திரி பற்றிய சில தகவல்களை மட்டும் கீர்த்திக்குச் சொல்லியிருக்கிறார்.

``ஒருமுறை, 'சாவித்திரி அம்மாவைப் பற்றி டிப்ஸ் கொடுங்க'னு கேட்டாள். 1981-ம் வருஷம், சுகுமாரி அம்மா, சாவித்திரி அம்மாவைப் பார்க்க அவங்க வீட்டுக்கு என்னை அழைச்சுட்டுப் போனாங்க. வீட்டு வாசலில் காரில் என்னை உட்காரவெச்சுட்டு அவங்க மட்டும் உள்ளே போயிருந்தாங்க. வெளியே வந்ததும், 'நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. ரொம்ப சுருங்கிப் போயிட்டாங்க. உன் மனசுல ஒரு சாவித்திரியை வெச்சிருப்பே. அது அப்படியே இருக்கட்டும். இப்போ அவங்களைப் பார்த்தால் ரொம்ப மனசு கஷ்டப்படுவே'னு சொல்லி என்னை ரிட்டர்ன் கூட்டிட்டு வந்துட்டாங்க. வீட்டு வாசல் வரை போயும் சாவித்திரி அம்மாவை நேரில் பார்க்க முடியலையேனு வருத்தப்பட்டேன். சுகுமாரி அம்மாகிட்ட பேசி சாவித்திரி அம்மா பற்றி நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டேன்.

இடதுகைப் பழக்கம் உடையவங்க, அநாயசமாக கார் ஓட்டுவாங்க, வெரைட்டியான பிளவுஸ் போடுவாங்க, கண் அசைவிலேயே நடிப்பாங்க'னு பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். அதையெல்லாம் இப்போ கீர்த்திகிட்ட சொன்னேன். சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி, என் நீண்ட கால தோழி. ஷூட்டிங் கிளம்புறதுக்கு முன்னாடியே அவங்ககிட்ட சாவித்திரி அம்மா பற்றி பல விஷயங்களை கீர்த்தி கேட்டுத் தெரிஞ்சுகிட்டாள். தினமும் சாவித்திரி அம்மா போட்டோவை கும்பிட்டுட்டுத்தான் ஷூட்டிங் போவாள்.

கடந்த 8-ம் தேதி, ஹைதராபாத்தில் ப்ரிவியூ ஷோ. சமந்தா, கீர்த்தி, நான் உள்பட 20 பேர் கலந்துக்கிட்டோம். கீர்த்தி எப்படிச் சாவித்திரி அம்மாவாக மாறியிருப்பாள்னு பெரிய சஸ்பென்ஸோடு படத்தைப் பார்க்க ஆரம்பிச்சேன். அப்போ நான் ஓர் அம்மாவா இருந்தேன். படம் முடிஞ்சபோது, கீர்த்தியின் ரசிகையா மாறி, 'நீ சாதிச்சுட்டே'னு கட்டிப்பிடிச்சு வாழ்த்தினேன். அழுகையை என்னால் அடக்க முடியலை. உடனே, 'அழாதேம்மா. என்னால் கன்ட்ரோல் பண்ண முடியலை'னு கீர்த்தியும் அழுதாள்.

சென்னையில் நடந்த ப்ரிவியூ ஷோவில், தமிழ் சீனியர் கலைஞர்கள் பலரும் படம் பார்த்தாங்க. 'வாழ்த்த வார்த்தைகளே இல்லை. நான் கீர்த்தியோட ரசிகை'னு நடிகை லட்சுமி அக்கா பாராட்டினாங்க. 'கீர்த்தியின் ஆக்டிங்கை பார்க்க சிவாஜி அப்பா இல்லையே'னு நடிகர் பிரபு சார் குடும்பத்தினர் சொன்னாங்க. 'நிச்சயம் கீர்த்திக்கு தேசிய விருது கிடைக்கும்'னு பாராட்டினாங்க. இந்தச் சந்தோஷ தருணத்தில் நேரம் போனதே தெரியாமல், ஃப்ளைட்டை மிஸ் பண்ணிட்டேன். சாரதா, விஜயகுமாரி, வாணிஶ்ரீ உள்ளிட்ட சீனியர் நடிகைகளும் , பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியும் நேர்லயும் போன்லயும் நிறைய வாழ்த்தினாங்க. 'எங்களால் தூங்க முடியலை. சாவித்திரியின் வாழ்க்கை உயர்வும் தாழ்வும் கலந்தது. அதை மறுபடியும் பார்த்த மாதிரி இருந்துச்சு'னு சொன்னாங்க. எனக்கும் சில நாளா தூக்கமில்லை. அப்படி ஒரு பெயரை எங்களுக்கு கீர்த்தி வாங்கிக்கொடுத்துட்டாள். என் வீட்டுக்காரர் சுரேஷ், ரொம்பவே தைரியமானவர். எதுக்குமே அழமாட்டார். படத்தைப் பார்த்துட்டு, மகளின் நடிப்பாலும் பாராட்டுகளாலும் நெகிழ்ந்து அழுதுட்டார். படத்தின் இயக்குநர், நாக் அஸ்வினுக்கு போன் பண்ணி பாராட்டினார்" என்கிறார் மேனகா சுரேஷ்.

தற்போது மற்றொரு பயோபிக் படத்தில் கீர்த்தி நடிக்கவுள்ளதாகப் பேச்சுவருகிறதே எனக் கேட்டால் மறுக்கிறார்.

``அதெல்லாம் வதந்தி. இனி கொஞ்ச காலத்துக்கு சாவித்திரியாவே கீர்த்தி இருப்பாள். இதெல்லாம் வாழ்க்கையில் அபூர்வமாகக் கிடைக்கும் வாய்ப்பு. அப்படி ஒரு படத்தில் கீர்த்தி உடனடியா நடிக்க மாட்டாள். எனக்கு ஒரு வருத்தம்தான். சாவித்திரி அம்மா வேடத்தில் கீர்த்தி இருக்கும்போது, அவளுடன் ஒரு போட்டோ எடுத்துக்கலை. மறுபடியும் சாவித்திரி அம்மா மாதிரி மேக்கப் போடவெச்சு, ஒரு போட்டோ எடுத்துக்கணும்" என ரசிகையாகச் சிலிர்க்கிறார் மேனகா சுரேஷ்.

மேலும் பல...

0 comments

Blog Archive