தடுப்பூசிகள் குறித்த மக்களின் அச்ச உணர்வு உலகிற்கே அச்சுறுத்தல்

தடுப்பூசிகள் மீதான உலகின் பிற்போக்குத்தனமான செயல்பட்டால், நோய் கிருமிகளின் மூலம் பரப்பப்படும் உயிழப்பை ஏற்படுத்தக் கூடிய நோய்களை தடுக்க வாய...

தடுப்பூசிகள் மீதான உலகின் பிற்போக்குத்தனமான செயல்பட்டால், நோய் கிருமிகளின் மூலம் பரப்பப்படும் உயிழப்பை ஏற்படுத்தக் கூடிய நோய்களை தடுக்க வாய்ப்பிருந்தும் முறியடிக்க முடிவதில்லை என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

நோய்த்தடுப்பு ஊசிகள் குறித்த மக்களின் மனப்பான்மையை அறிவதற்காக நடத்தப்பட்ட உலகளவிலான ஆய்வில் பல பிராந்தியங்கள் மிகவும் குறைவான நம்பகத்தன்மையை பதிவு செய்துள்ளன.

உலகிலுள்ள 140க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 1,40,000க்கும் மேற்பட்ட மக்களிடம் இதுகுறித்த ஆராய்ச்சியை வெல்கம் டிரஸ்ட் எனும் அமைப்பு மேற்கொண்டது.

உலகளவில் சுகாதாரத்துறைக்கு இருக்கும் முக்கியமான 10 அச்சுறுத்தல்களாக ஐநாவின் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள பட்டியலில், தடுப்பூசியை போட்டுக்கொள்வதில் இருக்கும் தயக்கமும் இடம்பெற்றுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மக்கள் சிறிதளவு நம்பிக்கையையே கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தடுப்பூசிகள் பாதுகாப்பானதா என்று கேட்டபோது,

    79% பேர் சிறிதளவு அல்லது முற்றிலுமாக நம்புவதாக தெரிவித்தனர்.
    7% பேர் சிறிதளவு அல்லது முற்றிலுமாக நம்பவில்லை
    17% பேர் தெளிவுற பதிலளிக்கவில்லை.

தடுப்பூசிகள் வேலை செய்ததாக நம்பினார்களா என்று கேட்டபோது,

    84% பேர் சிறிதளவோ அல்லது முற்றிலுமாகவோ நம்புவதாக தெரிவித்தனர்.
    5% சிறிதளவோ அல்லது முற்றிலுமாகவோ நிராகரித்தனர்.
    12% பேர் தெளிவுற பதிலளிக்கவில்லை.

இது ஏன் முக்கியமானது?

தட்டம்மை போன்ற கொடிய மற்றும் பலவீனப்படுத்தும் தொற்றுநோய்களுக்கு எதிராக தடுப்பூசி சிறந்த பாதுகாப்பாகும் என்பதற்கு ஏராளமான அறிவியல் சான்றுகள் உள்ளன.

தடுப்பூசிகள் உலகெங்கிலும் உள்ள பில்லியன்கணக்கான மக்களைப் பாதுகாக்கின்றன. பெரியம்மை எனும் நோயிலிருந்து உலகம் முற்றிலுமாக விடுபட்டுள்ளதுடன், போலியோ போன்றவற்றை உலகிலிருந்து முற்றிலுமாக நீக்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கியுள்ளது.

ஆனால்,பயம் மற்றும் தவறான தகவல்களால் மக்கள் தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதை தவிர்ப்பதால் அம்மை போன்ற வேறு சில நோய்கள் மீண்டும் எழுச்சி பெறுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய நிலைமை தீவிரமாக உள்ளதாக கூறுகிறார் ஐநாவின் உலக சுகாதார மையத்தின் நோய்த்தடுப்பு நிபுணர் டாக்டர் ஆன் லிண்ட்ஸ்ட்ராண்ட்.

"தடுப்பூசியின் மூலம் தடுக்கக் கூடிய நோய்களை கட்டுப்படுத்துவதில் உலகம் கண்டுள்ள மிகப் பெரிய முன்னேற்றத்தை, தடுப்பூசியை போட்டுக்கொள்வதிலுள்ள தயக்கம் மட்டுப்படுத்துகிறது" என்று அவர் கூறுகிறார்.

"உலகிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டதாக நாம் நினைக்கும் சில நோய்கள் மீண்டும் தலைத்தூக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத பின்னடைவு."
தட்டமையின் நிலவரம் என்ன?

தட்டமையை முற்றிலுமாக நீக்கும் நிலையை நெருங்கிய பல நாடுகளில் திடீர் பின்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

எந்தவொரு காரணத்திற்காகவும் தடுப்பூசி போடுவதை தவிர்க்க நினைத்தால் அது அச்சுறுத்தலுக்கு வழிவகுக்கும்.

தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட மக்களின் எண்ணிக்கை பெரும்பான்மையை தொட்டுவிட்டால், அது மேலும் பரவுவதை தடுக்க முடியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

எந்த பகுதியில் நம்பகத்தன்மை குறைவாக உள்ளது?

அதிக வருமானத்தை கொண்டவர்கள் வசிக்கும் பிராந்தியங்கள் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசிகள் குறித்து மக்களிடையே குறைந்த நம்பகத்தன்மை நிலவி வருகிறது.

எடுத்துக்காட்டாக, இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற மூன்றில் ஒரு பிரான்ஸ் நாட்டு மக்கள் தாங்கள் தடுப்பூசியை நம்புவதில்லை என்று தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, தடுப்பூசிகள் மீதான குறைந்த நம்பகத்தன்மையில் பிரான்ஸ்தான் முதலிடம் வகிக்கிறது.

இதன் காரணமாக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டிய தடுப்பூசிகளின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து எட்டாக அந்நாட்டு அரசாங்கம் உயர்த்தியுள்ளது.

அதே போன்று, பிரான்ஸுக்கு அருகிலுள்ள நாடான இத்தாலியில் நோய்த்தாக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, தடுப்பூசி போடாத குழந்தைகள் பள்ளியில் படிப்பதை தடைசெய்யும் மற்றும் அவர்களது பெற்றோருக்கு தடை விதிக்கம் சட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் சமீபத்தில் நிறைவேற்றியுள்ளது. இத்தாலியில் 76 சதவீத மக்கள் தடுப்பூசிகளை நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு, 2019ஆம் ஆண்டின் முதல் பாதிப் பகுதி வரை, அமெரிக்காவின் 26 மாநிலங்களில் 980 தட்டம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.

வட அமெரிக்காவிலும், வட மற்றும் தென் ஐரோப்பாவிலும் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் தடுப்பூசியை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மேற்கு ஐரோப்பாவில் 59% மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் 50% பேர்தான் நம்பகத்தன்மை தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு ஐரோப்பியாவிலேயே அதிகமாக 53,218 தட்டம்மை பாதிப்புகளை பதிவு செய்திருந்த உக்ரைன் மக்கள் தடுப்பூசிகள் மேல் 50 சதவீத நம்பிக்கையையே கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நம்பகத்தன்மை மிக்க பகுதிகள்

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளை சேர்ந்த மக்கள் பெரும்பாலும் தடுப்பூசிகள் பாதுகாப்பானது என்று இந்த கருத்துக்கணிப்பின்போது தெரிவித்துள்ளனர். அதாவது, உலகிலேயே அதிகபட்சமாக தெற்காசியாவை சேர்ந்த 95 சதவீத மக்கள், அதற்கடுத்த இடத்தை 92 சதவீதத்துடன் கிழக்கு ஆப்ஃரிக்காவும் பெற்றுள்ளது.

வங்கதேசமும் ருவாண்டாவும் மக்களுக்கு தடுப்பூசிகளைப் பெறுவதில் பல சவால்கள் இருந்தபோதிலும் மிக உயர்ந்த நோய்த்தடுப்பு விகிதங்களை அடைந்துள்ளன.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் ஒன்றான ருவாண்டா இளம்பெண்களை கர்ப்பப்பை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் தடுப்பூசியை நாடு முழுவதும் வழங்கியதில் உலகின் முதல் நாடாக உருவெடுத்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையின் நிலவரம்

இதே கருத்துக்கணிப்பு இந்தியா மற்றும் இலங்கையிலும் நடத்தப்பட்டது.

95 சதவீத இந்தியர்கள் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று தாங்கள் நம்புவதாக தெரிவித்துள்ளார்கள். அதே போன்று, தடுப்பூசிகள் உண்மையிலேயே பலன்மிக்கதாக உள்ளதாக 95 சதவீதத்தினரும், குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் முக்கியமென்று 98 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதே போன்று தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டதாக 91 சதவீத பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையை பொறுத்தவரை, 95 சதவீத்தினர் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று தாங்கள் நம்புவதாக தெரிவித்துள்ளார்கள். அதே போன்று, தடுப்பூசிகள் உண்மையிலேயே பலன்மிக்கதாக உள்ளதாக 95 சதவீதத்தினரும், குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் முக்கியமென்று 95 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதே போன்று தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டதாக 95 சதவீத பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களை அச்சமடைய வைப்பது எது?

விஞ்ஞானிகள், மருத்துவர்கள் போன்றவர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் பெரும்பாலும் தடுப்பூசிகள் குறித்த நேர்மறையான பார்வையை கொண்டுள்ளதாக இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

தடுப்பூசிகள் குறித்து மக்களிடையே குறைந்த நம்பகத்தன்மை உள்ளது தொடர்பாக குறிப்பிட்ட எந்த ஒரு காரணமும் இந்த கருத்துக்கணிப்பில் வாயிலாக அறியப்படவில்லை.

அனைத்து விதமான மருந்துகளும் பக்கவிளைவுகளை கொண்டுள்ளன. ஆனால், தடுப்பூசிகள் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படுகிறது.

ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் குறித்து இணையதளம் வாயிலாக பரப்பப்பட்ட போலிச் செய்திகள் மக்களிடையே அதுகுறித்த எதிர்மறையான எண்ணவோட்டத்தை ஏற்படுத்தியதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

"தடுப்பூசிகள் குறித்த மக்களிடையேயான தயக்கத்தையும், அச்சத்தையும் போக்குவதற்கு மக்களின் அடிப்படையான கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக பதிலளிக்க தெரிந்த மருத்துவ பணியாளர்களே மிகவும் அவசியம்" என்று மருத்துவர் லிண்ட்ஸ்ட்ராண்ட்.

மேலும் பல...

0 comments

Blog Archive