ஒரு காதல் ஜோடியின் கண்ணீர் கதை... ஆணவக்கொலையின் கொடூரத்தை காட்டும் 'பிரான்மலை' - விமர்சனம்!

ஆணவக்கொலையால் ஒரு காதல் ஜோடிக்கு நேரும் கொடுமைகளை பேசுகிறது பிரான்மலை திரைப்படம். பிரான்மலை ஊரின் முக்கிய தலைக்கட்டான வேலராமமூர்த்தியின் மக...

ஆணவக்கொலையால் ஒரு காதல் ஜோடிக்கு நேரும் கொடுமைகளை பேசுகிறது பிரான்மலை திரைப்படம்.

பிரான்மலை ஊரின் முக்கிய தலைக்கட்டான வேலராமமூர்த்தியின் மகன் வர்மன். அப்பா போல் இல்லாமல் மிகவும் சாதுவானவர், அம்மா இல்லாததால் பாசத்துக்காக ஏங்ககூடிய நபர். ஆதரவற்றோர் ஆசிரமத்தில் வளர்ந்து, எல்லோர் மீதும் அன்பு செலுத்தும் நேகா மீது வர்மனுக்கு காதல் மலர்கிறது. நேகாவும் வர்மனை காதலிக்கிறார். அப்பாவிடம் தன் காதலை சொல்ல தயங்கும் வர்மன், யாருக்கும் தெரியாமல் நேகாவை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த தொடங்குகிறார். இந்த விஷயம் சாதி வெறிப்பிடித்த வேலராமமூர்த்தி மற்றும் குடும்பதாருக்கு தெரிந்துவிடுகிறது. இதையடுத்து நடக்கும் அதிரடி சம்பவங்களை அழுத்தமாக பதிவு செய்கிறது பிரான்மலை.

படத்தின் ஹீரோவாக நடித்துள்ள வர்மன், தனது பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்திருக்கிறார். ஆக்ஷன், செண்டிமெண்ட், காதல் என தனது கடமையை நிறைவாக செய்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் நடிப்பை மெருகேற்றினால், எதிர்காலம் சிறக்க வாய்ப்புகள் அதிகம்.

புதுமுகம் நேகா தமிழ் சினிமாவுக்கு நல்ல அறிமுகம். கயல் ஆனந்தி சாயலில், பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கிறார்.

வழக்கம் போல இந்த படத்திலும் தனது நடிப்பால் படத்தை தாங்கிப்பிடித்திருக்கிறார் வேலராமமூர்த்தி. கறிக்குழம்பை அள்ளிக்குடிக்கும் அந்த காட்சியில் உண்மையிலேயே மிரளவைக்கிறார்.

காமெடிக்காக பிளாக் பாண்டி, கஞ்சா கருப்பு என இருவர் இருக்கிறார்கள். ஆனால் படத்தில் காமெடி தான் இல்லை. சிரிக்க வைப்பதற்கு பதிலாக 'கடுப்பேத்துறாங்க மைலார்டு' என புலம்ப வைக்கிறார்கள்.

படத்தின் கதை மிக ஆழமானது. தமிழ்நாட்டில் இப்போது நடக்கும் பல உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. ஆனால் திரைக்கதை என்ற ஒன்று இல்லாததால் படம் ஏனோதானோவென செல்கிறது.

ஒவ்வொரு காட்சியும் நிறுத்தி நிதானமாக செல்வதால் படத்தில் சுவாரஸ்யமே இல்லை. அதுவும் க்ளைமாக்சில் இருந்து தான் படமே ஆரம்பமாகிறது. நல்ல திரைக்கதை அமைத்திருந்தால், கதைக்கு வலு சேர்த்திருக்கும். இதை அடுத்த படத்திலாவது கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள் இயக்குனர் அகரம்குமரா.

ஆனால் படத்தில் இரட்டை அர்த்த வசனங்களோ, ஆபாசமான காட்சிகளோ இல்லை. அதற்காக வேண்டுமானால் இயக்குனரை பாராட்டலாம்.

குறைந்த பட்ஜெட் படம் என்பதால், ஒளிப்பதிவு, எடிட்டிங் என சுமாராகவே இருக்கிறது. இசை மட்டும் ஆறுதல் தரக்கூடிய வகையில் இருக்கிறது. குறிப்பாக அந்த ஓபனிங் குத்து பாடலுக்காக இசையமைப்பாளர் பாரதி விஸ்கரை பாராட்டலாம்.

முதல் படம் என்றாலும், அதில் ஆணவக்கொலையை பற்றி பேசியிருப்பதால் 'பிரான்மலை'க்கு சின்னதா ஒரு கைத்தட்டல்.

மேலும் பல...

0 comments

Blog Archive