மோடிக்காக வாங்கப்பட்ட புதிய போயிங் விமானம்- அசத்தும் ஆடம்பரம்... பாதுகாப்பில் கம்பீரம்..!!

பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி கோவிந்த் ஆகியோரது வெளிநாட்டு பயணங்களுக்கு வேண்டி போயிங் 747 - 400 ஜம்போ என்கிற விமானம் 27 ஆண்டுகளாக பயன்படுத்...

பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி கோவிந்த் ஆகியோரது வெளிநாட்டு பயணங்களுக்கு வேண்டி போயிங் 747 - 400 ஜம்போ என்கிற விமானம் 27 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பராமரிப்பு பணிகள் அனைத்தையும் ஏர் இந்தியா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

தவிர, ஏர் இந்தியாவைச் சேர்ந்த பயிற்சிப் பெற்ற விமானிகள் தான் இந்த விமானங்களை இயக்கி வருகின்றனர். பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் பயணங்கள் முடிந்ததும், இந்த விமானங்கள் வர்த்தக பயன்பாட்டுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

விவிஐபி பயணங்களுக்கு வேண்டி சிறப்பு வசதிகளை பெற்றிருக்கும் இந்த விமானம், அந்த பயணம் முடிந்த பிறகு வர்த்தக பயன்பாட்டுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படும். விமானத்தை மாற்றியமைக்க மொத்தமாக 12 நாட்கள் வரை ஆகும்.

பிரதமர் உள்ளிட்ட விவிஐபி-க்கள் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு செல்லும் போது எரிபொருள் நிரப்புவதற்காக வளைகுடா நாடுகளில் விமானம் நின்று செல்லும். இதனால் பயண நேரம் அதிகரிப்பதோடு, பாதுகாப்பு குறித்த கேள்விகளும் எழுகின்றன.

மேலும் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரது உயிருக்கு அச்சுறுத்தல் நிலவும் சூழல் உருவாகிறது. இந்த பிரச்னையை களையும் நோக்கில் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட புதிய விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.

அதை தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டில் ரூ. 2,100 கோடி மதிப்பிலான போயிங் 777-300 இ.ஆர் ரக விமானங்களுக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டன. இந்த விமானங்கள் கடந்த 2018ம் ஆண்டில் போயிங் நிறுவனத்திடமிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன.

முக்கியஸ்தர்களில் பயணங்களுக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகள் இந்த விமானங்களில் ஏற்படுத்த முடிவுகள் செய்யப்பட்டன. அதற்கு வேண்டி தற்போது இரண்டு போயிங் புதிய ரக விமானங்களும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு விவிஐபி-க்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு கஸ்டமைஸ் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விமானத்தில் ஆலோசனை நடத்தும் அறை, சமையலறை, 2000 பேருக்கு உணவு பொருட்களை வைப்பதற்கான கூடம், படுக்கையறை, சிறியளவிலான அறுவை சிகிச்சை செய்யும் அறை, விவிஐபி-க்களின் ரத்தப் பிரிவைச் சேர்ந்த ரத்த வங்கி, பத்திரிக்கையாளர்களுக்கான இருக்கை வசதி, 24 மணிநேரம் மருத்துவர்கள் இருப்பதற்கான அறை, விமான உதவிப் பணியாளர்கள் தங்கும் அறை போன்ற பல ஆடம்பர வசதிகள் உண்டு.

இவை தவிர சேட்டிலைட் தொலைப்பேசி வசதி, பிரதமருக்கான தனி அலுவலகம், 19 டிவி திரைகள் என ஒரு நட்சத்திர விடுதிக்கான அனைத்து வசதிகளும் இதில் உள்ளது. இந்த கஸ்டமைஸ் பணிகளின் போது உயர் ரக கவச பாதுகாப்பு தொழில்நுட்பம் விமானத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினால் அதை முறியடிப்பதற்கான தொழில்நுட்பம், கண்காணிப்பு ரேடார்கள் போன்ற வசதிகளும் இதில் இடம்பெறும்.

மேலும், அணு கதிர்வீச்சு தாக்குதலில் இருந்து தப்புவதற்கான தொழில்நுட்பம், நடுவானில் எரிபொருள் நிரப்புவதற்கான வசதி உள்ளிட்ட அம்சங்களும் இந்த போயிங் 777-300 இ.ஆர் விமானத்தில் இருக்கும். இந்த புதிய கஸ்டமைஸ் பணிகளுக்காக மட்டும் இதுவரை ரூ. 1,100 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.

தற்போது பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் பயன்படுத்தி வரும் போயிங் 747 விமானம் போன்று, இந்த புதிய ரக விமானங்கள் வர்த்தக சேவைக்காக பயன்படுத்தப்படாது. பிரத்யேகமாக விவிஐபி-களுக்காக மட்டுமே இது இயங்கும். இந்த இரண்டு விமானங்களின் பராமரிப்புப் பணிகளையும் வழக்கம் போல ஏர் இந்தியா மேற்கொள்ள இருக்கிறது.

தவிர, இந்த புதிய ரக விமானங்களை இயக்குவதற்கு இந்தியாவின் விமானப் படை விமானிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பரிலோ அல்லது அடுத்த வருட தொடக்கத்திலோ இந்த விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

உலகின் மிகப்பெரிய விமானமான போயிங் 777 300 இ.ஆர். மாடல் மிகவும் சக்திவாய்ந்த வானூர்தியும் ஆகும். இதில் முழுமையாக எரிபொருள் நிரப்பினால், இந்த விமானத்தால் அதிகப்பட்சமாக 13,650 கி.மீ வரை செல்ல முடியும். இரண்டு எஞ்சின்களை கொண்ட இந்த விமானத்தில் 513 கே.எம் திரஸ்ட் வழங்கும் திறன் உள்ளது.

இரண்டு பைலட்டுகள் ஒருசேர அமர்ந்து இந்த விமானத்தை இயக்கலாம். மணிக்கு அதிகபட்சமாக 945 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய திறன் பெற்ற இந்த விமானம், சராசரியாக 892 கிமீ வேகத்தில் இயக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது இதனால், நீண்ட தூர பயணங்களை சுலபமாக முடிக்க இந்த விமானங்கள் உதவும்.

மேலும் பல...

0 comments

Blog Archive