பிக் பாஸ் ஓவியாவின் உணர்வுகளைப் புரிஞ்சுக்கிறீங்க... ஆனா, வீட்ல இருக்கிற ஓவியாவை!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி பற்றிய செய்திகளைக் கேட்காமல், பேசாமல் ஒருநாள் நிறைவடையாது என்றாகிவிட்டது. அந்த ...

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி பற்றிய செய்திகளைக் கேட்காமல், பேசாமல் ஒருநாள் நிறைவடையாது என்றாகிவிட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்களின் மகிழ்ச்சி, அழுகை, ஆனந்தம், கோபம், சண்டை ஆகியவற்றிற்கு, பார்வையாளர்கள் தங்களின் எதிர்வினையைச் சமூக ஊடகங்களில் பதிவுசெய்துவருகின்றனர். நடிகை ஓவியாவுக்கான ஆதரவை எல்லா மட்டங்களிலும் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு வாரம் அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதற்கான நபராக ஓவியா சகப் போட்டியாளர்களால் பரிந்துரை செய்யப்பட்டாலும், பொதுமக்களின் வாக்குகளால் நிகழ்ச்சியில் தொடர்வது வாடிக்கையாகிவிட்டது.

பொதுமக்கள் ஓவியாவை விரும்புவதற்கான காரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். பிக்பாஸில் சக போட்டியாளர்களால் தொடர்ந்து சீண்டப்படும் நபராக ஓவியா இருந்து வருகிறார். அவரைக் கோபமூட்டவும் அவர் சொல்லாததைச் சொன்னதாகவும் கூறப்பட்டுப் பிரச்னையாக்குவதும் நடக்கிறது. ஒரு கட்டத்தில் அவரைத் தவிர மற்றவர்களெல்லாம் ஓர் அணியாக இவரைத் தனிமைப்படுத்துகின்றனர். அந்தச் சூழலுல் ஓவியா, தன் மீது சுய இரக்கம் கோராது துணிவோடு அதை எதிர்கொள்கிறார். தன் கருத்துகளைத் தயக்கமின்றி கூறுகிறார். கூடுமானவரை அழுவதைத் தவிர்க்கிறார். விரக்தியான முகப்பாவத்தை ஒரு போதும் வெளிப்படுத்துவதில்லை என்பதாகச் சொல்லிக்கொண்டே போகலாம். ஓவியாவின் இந்தப் பண்புகளை ரசித்து அவருக்காக வாக்களித்தவர்கள் எத்தனை பேர் தங்கள் வீட்டில் இருக்கும் ஓவியாக்களைப் (அதாவது ஓவியாவின் பண்புகளைக் கொண்டவர்களை) புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.

பிக்பாஸ் ஓவியா தன் மனதில்பட்டதைத் தயங்காமல் வெளிப்படுத்துவதைச் சிலாகிப்பவர்கள், தங்கள் வீட்டில் உள்ள ஓவியாவை அதுபோலப் பேச அனுமதித்திருக்கிறார்களா? அப்படி அனுமதித்திருந்தால் பெண்கள் தாங்கள் விரும்பும் படிப்புத் தொடங்கிக் காதல் வரை முதலில் பெற்றோரிடம்தானே கூறியிருப்பார்கள். அதுபோன்ற ஜனநாயகம் நம் வீடுகளில் இருக்கிறதா என்ன? அப்படி இருந்திருக்கும் பட்சத்தில் படித்த படிப்பைப் பயன்படுத்தாமல் சான்றிதழ்களில் முடக்குவதும், ஆணவக் கொலைகள் நடந்திருக்கவும் வாய்ப்பே இல்லை அல்லவா!

மழையை மற்றவர்கள் வேடிக்கைப் பார்க்க, ஓவியா மட்டுமே மழையில் நனைந்து, ஆடி மகிழ்கிறார். தான் நினைப்பதைச் செய்கிறார். அதைப் பாராட்டும் எத்தனை பேர் தங்கள் வீட்டில் குழந்தைகள், பெண்களின் மழையில் நனையும் ஆசைக்குக் குறுக்கே நிற்காமல் இருந்திருக்கிறார்கள். மழையில் நனைவது மட்டுமல்ல பெண்களின் சின்னச் சின்ன ஆசைகள் அவர்கள் இறக்கும் வரை நிறைவேறாமலே போய்விடுகிறது.

ஓவியா சகப் போட்டியாளர்களிடம் தன் நிலையை எடுத்துக்கூறும்போதெல்லாம் அவர்கள் அதைப் புரிந்துகொள்ளாமல் மடைமாற்றிவிடுகிறார்கள். ஓவியாவைக் கோபமேற்றவும் செய்கிறார்கள். அதைப் பார்க்கும் நீங்கள் ஓவியாவைத் தவிர்த்தவர்கள் மேல் கோபமுறுகிறீர்கள். இந்தக் கோபம் ஓவியாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதிலிருந்தே வருகிறது. இதேபோல உங்கள் வீட்டில் இருக்கும் ஓவியாவை முழுமையாக தம் கருத்துகளைக் கூற அனுமதித்திருக்கிறீர்களா? இடைமறிக்காமல் பேச்சைக் கேட்டு, அதன்பின் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறீர்களா? அவர் கூறுவதிலிருக்கும் நியாயங்களை அவரின் பார்வையிலிருந்து புரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா? அநேகமாக ஒரு பகுதியினர் ஆம் என்றும் ஒரு பகுதியினர் இல்லையென்றும் கூறுவர். ஆனால், பெரும்பகுதியினர் மழுப்பலான பதிலைத்தான் சொல்வார்கள்.

பிக் பாஸ் ஓவியா, நிகழ்ச்சியின் நெறியாளர் நடிகர் கமல்ஹாசனிடம் பேசும்போது, அந்த வீட்டில் தனக்கு எதிராக நடப்பவற்றைத் தெளிவாகச் சொல்லவில்லை என்ற ஆதங்கம் பார்வையாளர்கள் பலருக்கும் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் அவர் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டை விடுவிக்கும் வீடியோ ஒளிப்பரப்பானதும் பார்வையாளர்களின் கைத்தட்டல் அரங்கை அதிரச் செய்தது. இதே போன்று தன்னை வெளிப்படுத்தும் முறையில் சொற்களை லாவகமாகக் கையாளத் தெரியாத 'வீட்டு' ஓவியாக்களை இனம் கண்டுள்ளீர்களா? தன் மனதிலிருக்கும் விஷயங்களைக் கேட்பவருக்குச் சரியாகச் சென்றடையும் சொற்களால் விளக்க முடியாமல், அதனால் கோபம் அல்லது இயலாமையால் சூழப்படுவர். அதனால் அழுகையோடு தன் பிரச்னையை இன்னும் பெரிதாக்கிக் கொள்வர். பிக் பாஸ் ஓவியாவிடம் காட்டும் பரிவை இவரிடமும் காட்டும்போது வீட்டு ஓவியாவின் பிரச்னை எளிதாகத் தீர்ந்துவிடும் அல்லவா!

பிக் பாஸ் ஓவியா தனக்கு எதிராக நடந்துகொள்ளும் எவரையும் அவர் கேட்கும் 'ஸாரி' எனும் ஒரு சொல்லால் மன்னித்து, நட்பு பாராட்டுகிறார். அதேபோல, தான் செய்யும் தவறை உணர்ந்த கணத்தில் மன்னிப்பும் கேட்டு விடுகிறார். உங்கள் வீட்டு ஓவியா கேட்கும் மன்னிப்புகளை ஏற்றுகொள்கிறீர்களா? அந்த வருத்தத்தை முழுமையாகப் புரிந்துகொள்கிறீர்களா? அந்த மன்னிப்பு கேட்கும் சரியான தருணங்களை அவர்களுக்கு வழங்குகிறீர்களா... ஏனெனில் பல வீடுகளில் சிறிய பிரச்னைகள் நடந்தாலும் வீட்டை விட்டு வெகுநேரம் வெளியே சென்றுவிடுவதைப் பலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள். அவர்கள் திரும்பி வரும் நேரம் வரை அந்த மன்னிப்பைச் சுமந்துகொண்டு வீட்டு ஓவியா காத்திருக்க வேண்டும். அந்தக் காத்திருப்பு மிகக் கொடுமையானதல்லவா?

ஓவியாவிடம் பலர் ரசிப்பதன் அடிப்படை என்பது அவர் அவராக இருக்கிறார். அதாவது, சமூகத்தில் ஆண்களால், ஆண் மனநிலையைப் பெண்ணின் மனநிலையாக மாற்றிக் கட்டமைப்பட்டிருப்பதைப் போல இல்லாமல், பெண் மனநிலையில் அதை வெளிப்படுத்துவதில் நேர்மையாக இருக்கிறார் என்று பார்வையாளர்களால் உணரப்படுகிறது. திரையில் அழும் குழந்தையை விட, நிஜத்தில் நம் வீட்டில் அழும் குழந்தையின்மீது அதிகப் பரிவு ஏற்படும். உடனே அந்தக் குழந்தை அழும் காரணத்தைச் சரி செய்வோம். அதேபோல நம் வீட்டு ஓவியாக்களையும் புரிந்துகொள்ள முயல்வோம்.

மேலும் பல...

0 comments

Blog Archive