சீமராஜா சினிமா விமர்சனம்

கரு:தடை பல கடந்து, இரண்டு ஊர் பகைக்கு இடையே வளரும் காதலும் அந்த காதலரின் வரலாற்று பின்னணியும் தான் இப்படக் கரு. கதை: திருநெல்வேலி மாவட்டம்,...

கரு:தடை பல கடந்து, இரண்டு ஊர் பகைக்கு இடையே வளரும் காதலும் அந்த காதலரின் வரலாற்று பின்னணியும் தான் இப்படக் கரு.

கதை: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள சிங்கம் பட்டிக்கும், புளியம்பட்டிக்கும் இரண்டு ஊருக்கும் பொதுவான ஒரு மார்கெட் சந்தையால் ஆண்டு கணக்கில் பகை. அந்த பகையை சிங்கம்பட்டி சீமராஜா சிவகார்த்திகேயன் எப்படி தன் புத்திசாலிதனத்தால் தீர்த்து, எட்டு வருஷம் நடக்காத கோவில் பரிவட்ட திருவிழாவை நடத்தி காட்டி, தான் உயிருக்கு உயிராய் விரும்பும் புளியம்பட்டி பொண்ணுசுதந்திரதேவி – சமந்தாவை தடை பல கடந்து கரம் பிடிக்கிறார் என்பது தான் "சீமராஜா" படத்தின் கதையும், களமும்.

காட்சிப்படுத்தல்: சிவகார்த்திகேயன் - சமந்தா ஜோடியுடன் சூரி, யோகி பாபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன், நெப்போலியன், லால், சிம்ரன், மனோபாலா, ரஞ்சனி,"பிச்சைக்காரன்" மூர்த்தி, சூப்பர் குட் சுப்பிரமணி... ஆகியோருடன் கீர்த்தி சுரேஷும் கெஸ்ட் ரோலில் நடிக்க, 24 ஏ எம் பட நிறுவனம் ஆர்டி ராஜா தயாரிப்பில், டி.இமான் இசையில் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்", "ரஜினி முருகன்" வெற்றிப் படங்களை சிவகார்த்திகேயனுக்கு தந்த இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் "சீமராஜா. " படத்தில் காமெடி காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம்.... அசத்தல் எனலாம். அப்படி ஒரு செம காமெடி கதையில் கொஞ்சம் அந்த கால ஜமீன் மற்றும் ராஜா காலத்து கதையையும் ப்ளாஷ்பேக்கில் கலந்து ரொம்பவே'பெப்' ஏத்தி மொத்தப் படத்தையும் எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும், கலர்புல்லாகவும் தரமுடியுமோ..? அத்தனைக்கு அத்தனை அழகாக காட்சிப்படுத்தி தந்திருக்கின்றனர் "சீமராஜா" படக் குழுவினர் என்பது இப்படத்திற்கு பெரிய ப்ளஸ்!

கதாநாயகர்: சீமராஜா எனும் சிங்கம் பட்டி ஜமீனின் ஜாலி இளவரசராகவும், ப்ளாஷ்பேக்கில் சீமராஜாவின் பாட்டனுக்கு பூட்டன், ஓட்டன்... வீரமிகு மன்னர் கடம்ப வேல்ராஜாவாகவும் சிவகார்த்திகேயன், தனக்கு சாலப் பொருத்தமான செம மாஸான கதையிலும், களத்திலும் கலக்கியிருக்கிறார் கலக்கி.

அதிலும், இரண்டு குதிரை பூட்டிய சாரட் வண்டியில் இளவரசர் சீமராஜாவாக, கணக்கு சூரியுடன் சேர்ந்து பண்ணும் அலப்பறையில் ஆகட்டும், அவரது முப்பாட்டன், ஓட்டன் ஜமீன் மன்னர் கடம்ப வேல்ராஜா வாகஒற்றை குதிரையை ஓட்டிச் சென்று வீரத்துடன் போர் புரியும் போது காட்டும் மிடுக்கில் ஆகட்டும் பலே, பலே.... சொல்ல வைக்கிறார்.

'வாழ்றதுக்கு எப்படி நன்பன் முக்கியமா வேணுமோ அதே மாதிரி எதிரியும் கூட இருந்து கிட்டே இருக்கணும்... அப்போதான் மனுஷனுக்கு ஜெயிக்கணுங்கிற வெறி இருக்கும்...", "உழுதவனுக்கு உளுத்துப் போன அரிசி உட்கார்ந்து சாப்பிடுறவனுக்கு பிரியாணி அரிசியா...? " என விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் ஆதரவு குரல் கொடுக்கும் இடங்களில் கூட சிவா செம அசத்தல்.

அதே மாதிரி, "நம்பிக்கை துரோகம் நான் இதுவரை பார்த்திராத ஒன்று... நான் மீண்டும் வருவேன் என் உயிரே போயினும் இந்த மண்னை மீட்க வருவேன் ...." என்றபடி மடியும் இடத்தில் கடம்பராஜா- சிவகார்த்தி, ஏனோ தெரியவில்லை,நம்மையும் கண் கலங்க வைத்து விடுகிறார்.

மேலும், சமந்தா என்ட்ரி காட்சியில் தன் ஆண் புறாக்களைத் தேடி, வளையல் வியாபாரி கெட்-அப்பில் வாட்ச் விற்பனையாளராக அவரிடம் சிக்கும், சிவா, தன்னை அடிக்க கட்டை எடுத்துவரும் சமந்தாவைப் பார்த்து, "தயவு செய்து முதல்ல கட்டையை கீழே போடுங்க, எது கட்டைன்னு தெரியலைன்னு... " கலாய்க்கும் இடம் உள்ளிட்ட பல காட்சிகளில் தன் பாணி குறும்பு கொப்பளிப்புகளிலும் குறை வைக்காதது... படத்திற்கு கூடுதல் பலம்.

கதாநாயகி: புளியம்பட்டி சிலம்பு செல்வி - சுதந்திர செல்வியாக சமந்தா செம. சமத்தா சிலம்பம் எல்லாம் சுற்றும் வீரப்பெண்ணாக மிரட்டியிருக்கிறார்... மிரட்டி. சிவகார்த்தி, படத்தில் ஒரு இடத்தில் சமந்தாவைப் பார்த்து அடிக்கும் "பன்ச்" போன்றே சமந்தா, "சும்மா சாமுத்ரிகா லட்சணுத்துல சலிச்சு எடுத்த சுகர்ல..." அம்மணி அழகு தேவதையாகவும்வசீகரிக்கிறார்.

பள்ளி விழாவில் உடற்பயிற்சி ஆசிரியையான சமந்தாவுக்கு சிவகார்த்தி நல்லாசிரியர் விருது வழங்கி நல் அழகாக இருக்காங்கள்ள... அதான் விருது என்னும் போதும் தியேட்டர் சிரிப்பொலியில் அதிர்கிறது.

மற்றொரு நாயகி: கெஸ்ட் ரோலில் ப்ளாஷ்பேக்கில், மன்னர் கடம்ப வேல்ராஜா - சிவகார்த்தியின் மனைவியாக தலை காட்டியிருக்கும் கீர்த்தி சுரேஷ், எதிர்பார்ப்பை கூட்டுகிறார்.

காமெடியன்: சூரி - சிவகார்த்தி காம்பினேஷன் எத்தனை பிரசித்தி என்பதற்கு "வ.ப. வாலிபர் சங்கம்", "ரஜினி முருகன்" என ஏகப்பட்ட படங்கள்சாட்சி. இந்தப் படமும் அதற்கு சற்றும் சளைத்ததல்ல... "ராஜா நீங்க ஏமாளி ராஜா.. ", "கொன்னுபுடுவீங்க கொன்னு..." என்றெல்லாம் சிவாவையே கலாய்க்கும் அவரது கணக்குப் பிள்ளை மேத்ஸ் - சூரி, செல்பியை சிலேப்பி... என்று பண்ணும் காமெடி கலாட்டாவில் தொடங்கி, ஆம்பளை புறாக்களைத் தேட வந்த இடத்தில், புறாக்களுக்கு, இதுதான் சரவணபவன் என சோள காட்டை காட்டிடுவது எனத் தொடர்ந்து, "பர்ஸ்ட் நைட் பெட்ஷீட்" விற்பது வரை காட்சி காட்சி சிரிப்பு மூட்டுகிறார்…அதிலும், "நான் உள்ள போய் செல்வியை தூக்க போறேன்.... நாலு பேர் அடிச்சு கேட்டாலும் உண்மைய சொல்லாத...i எனும் சிவகார்த்தியிடம் "நாக சைதன்யாவே வந்தாலும் சொல்ல மாட்டேன்..." எனும் இடத்தில், மிரட்டல்.

அதே நேரம், ஜில், ஜங், ஜக் என மூன்று மனைவிகளின் புருஷனான சூரிக்கு நான்காவதாக ஒரு திருமணம் க்ளைமாக்ஸில் இயக்குனர் செய்து வைப்பதும் சில காட்சிகளில் சூரியை சிக்ஸ் பேக்கில் விட்டிருக்கும் துணிச்சலும் கொஞ்சம் ஒவருங்கோ…

உப நாயகர்: சிவாவின், அப்பா கேரக்டரில் அவமானத்தில் சாகும் எட்டுப் பட்டி ராஜாவாக நெப்போலியன், ராஜாவுக்கு உரிய மிடுக்கு காட்டி அடக்கி வாசித்திருக்கிறார்.

வில்லி: சிம்ரன், வில்லன் லாலின் வில்லி மனைவியாக "நக்கத்தரங்கெட்ட நாயி.. நடு ஜாமத்துல எலும்பு கேட்டுச்சாம்.. " , "நீங்கள்ளாம் வேட்டியில தான்டா சண்டியர் கட்டு கட்டுவீங்க..... நான் புடவையிலயே கட்டுவேன் பாக்கறீங்களா? பாக்கறீங்களா...? என புடவையை வரிந்து கட்டி, இந்த ரீ-என்ட்ரியில் விஸ்வரூபம் எடுக்க முயன்றிருக்கிறார். பேஷ், பேஷ்!

வில்லன்: "என்னால ராஜா ஆக முடியாது... ஆனா நான் இருக்கிற ஊர்ல இன்னொரு ராஜா இருந்கக் கூடாது... " என வீம்பு பிடிக்கும் வின்ட் மில் வில்லன் - காத்தாடி கண்ணனாக வில்லன் லால் ஜமாய்த்திருக்கிறார்.

பிற நட்சத்திரங்கள்: யோகி பாபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன், மனோபாலா, ரஞ்சனி, "பிச்சைக்காரன்" மூர்த்தி, சூப்பர் குட் சுப்பிரமணி... ஆகியோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.

தொழில்நுட்பகலைஞர்கள்: படத்தொகுப்பு, பக்கா தொகுப்பு, பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியிலும் ஒவியப் பதிவாக மிளிர்கிறது. டி.இமானின் இசையில், வாரன் வாரன் சீமராஜா வழிய விடுங்கடா ...", "மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டுப்பாரேன் என்னைப் பத்தி... ", "பட்டுன்னு ஒட்டுற பொண்ணுங்க .... வரும் ஆனா வராது.... ", "கொடுத்த அடியதிரும்ப திரும்ப கொடுக்கிறான்....", "உன்ன விட்டா எனக்கு யாரும் இல்ல ....", "கொற்றவனே குலக்கொழுந்தே .... ", "எட்டூரு எட்டும் படி ...." உள்ளிட்ட அனைத்துப் பாடல்களும், பின்னணி இசையும் பிரமாதம். கூடவே, படத்திற்கு பெரும் பலம்.

பலம்: பொன்ராம்- சிவகார்த்திகேயன்-சூரி-டி.இமான் கூட்டணியும் , "சீமராஜா" எனும் டைட்டிலும் பலம்.

பலவீனம்: அப்படி, பெரிதாக எதுவுமில்லை…

இயக்கம்: பொன்ராமின் எழுத்து, இயக்கத்தில், பூமாரங்கைக் காட்டிலும் - பெருமை வாய்ந்த பண்டைய ஆயுதமான "வளரி" பற்றிய பெருமை பேசியிருக்கும் விதமும், நாய் டைகரை சிறுத்தையாக்கிய, காமெடி மூலம் செல்பி வாட்ஸ் - அப் மோகிகளுக்கு வைத்திருக்கும்குட்டும் அசத்தல்! இவை எல்லாவற்றையும் காட்டிலும், .." விவசாயி என்னக்குய்யா லாபம் பார்த்துருக்கான்? ", "தமிழனோட நிலம் தமிழன் கிட்டதான் இருக்கணும்...", "நாம என்ன செய்றோங்கறதை விட எதிரிங்க என்ன செய்றாங்குகிறதை பார்க்கிறது தான் முக்கியம்." என்றெல்லாம் விவசாயமும், வீரமும் பேசியிருக்கும் விதமும் ஹைலைட்டோ ஹைலைட்!

" தல'க்கே தலை புள்ள பொம்பள புள்ள தான்.... பொம்பள புள்ளன்னா அவ்வளவு கேவலமா என்ன?" ன்னு காமெடி. படத்தில் கிடைத்த கேப்பில் எல்லாம் "பன்ச் "சும், மெஸேஜும் வைத்திருக்கும் இயக்குனர் பொன்ராமுக்கு ஒரு ஹேட்ஸ் ஆப்சொல்லியே ஆகவேண்டும்.

பைனல் "பன்ச்": "சீமராஜா' சிவகார்த்திகேயன்படங்களில் மற்றும் ஒரு 'சிறப்பு ராஜா!"

மேலும் பல...

0 comments

Blog Archive