வாலிபக் கவிஞர் வாலி – காலமான நாளின்று!

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்.1958 ஆம் ஆண்டு ‘அழகர் மலைக்கள்ளன்’ என்ற படத்திற்குதான் தனது முதல் பாடலை எழுதினார...

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்.1958 ஆம் ஆண்டு ‘அழகர் மலைக்கள்ளன்’ என்ற படத்திற்குதான் தனது முதல் பாடலை எழுதினார் வாலி. அன்று தொடங்கிய வாலியின் திரையுலக வாழ்க்கை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. கவிஞர் கண்ணதாசன் ஒருபுறம் தமிழ் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் தனது தனித் திறமையால் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

தமிழில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேல் பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி, எம்.ஜி.ஆருக்காக எழுதிய பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்…, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்…”உள்ளிட்ட ஏராளமான பாடல்களை குறிப்பிடலாம்.

“புதிய வானம்… புதிய பூமி, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே…, “ஏமாற்றாதே ஏமாறாதே…, நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்…, கண் போன போக்கிலே கால் போகலாமா.., காற்று வாங்க போனேன் கவிதை வாங்கி வந்தேன்.., வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கையிகளில்.., நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை…, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்.., ஊர்வசி ஊர்வசி…, அம்மா என்றழைக்காத உயிரில்லையே…”என எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் இருந்து, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சித்தார்த் என இக்கால நடிகர்களின் படங்கள் வரை பாடல்கள் எழுதி உள்ளார்.

கடைசி பாடல்

இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் தயாராகும் படத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் அவர் எழுதிய பாடல்தான் கடைசி பாடலாகும்.

விருதுகள்

பத்மஸ்ரீ விருது-2007

வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர்.
1970 – எங்கள் தங்கம்
1979 – இவர்கள் வித்தியாசமானவர்கள்
1989 – வருஷம் பதினாறு , அபூர்வ சகோதரர்கள்
1990 – கேளடி கண்மணி
2008 – தசாவதாரம்.

20 நூல்கள்

திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது 20 நூல்களையும் எழுதி உள்ளார் வாலி.

எம்.ஜி.ஆர். – கருணாநிதி

முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் கருணாநிதி ஆகியோர் அரசியலில் இருவேறு துருவங்களாக இருந்த நிலையில், இரண்டுபேரிடமும் நல்ல நட்புறவை வளர்த்துக்கொண்டவர் வாலி.

எம்.எஸ்.விஸ்வநாதன் – இளையராஜா – ஏ.ஆர். ரஹ்மான்

தமிழ் திரையுலகின் இசை ஜாம்பவான்களான எம்.எஸ்.விஸ்வநாதன் – இளையராஜா ஆகிய இரு இசையமைப்பாளர்களின் இசையில்தான் வாலி ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார் என்றபோதிலும், ஏ.ஆர். ரஹ்மான் இசையிலும் இளமை துள்ளும் பல பாடல்களை எழுதியுள்ளார்.
வாலிபக் கவிஞர்

பத்மஸ்ரீ விருது, சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர் வாலி. 82 வயதானாலும் இன்றுவரை வாலிபக் கவிஞராகவே வலம் வந்தவர்.

பள்ளித் தோழர் சூட்டிய பெயர் வாலி!

தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் பிரபல இதழில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி’யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி ‘வாலி’ என்னும் பெயரைச் சூட்டினார். எம்.ஜி.ஆர், சிவாஜி தலைமுறை தொடங்கி, ரஜினி-கமல் தலைமுறையில் தொடர்ந்து இன்று புதிதாய் அறிமுகமாகும் கதாநாயகர்களுக்கும் பாடல்கள் எழுதுமளவுக்கு, அனைத்துத் தலைமுறையினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு படைப்பாளி கவிஞர் வாலி.

திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி, மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் என்று அவர் தனது தமிழாற்றலைப் பல பரிமாணங்களில் வெளிப்படுத்தியவர் என்பதை எப்படி மறக்க முடியும்? இராமாயணத்தைக் கூட இவ்வளவு எளிமையாக, புதுக்கவிதை வடிவில் சொல்ல முடியும் என்று நிகழ்த்திக்காட்டியவர் அல்லவா?

அசோகவனத்துச் சிறைவாசத்திலிருந்த சீதை, அனுமன் கொண்டுவந்த கணையாழியைப் பார்த்துப் பூரித்ததை…

பேரானந்தத்தில் பிராட்டி
பேச்சற்று நின்றாள்
கணையாழியை- ஈரக்
கண்களால் தின்றாள்.

என்று சொல்லிய லாவகம் ஒன்று போதுமே?

தாய்ப்பாசம் குறித்து எத்தனையோ பாடல்கள் வந்திருந்தாலும், கவிஞர் வாலி எழுதி, இசைஞானி இசையமைத்து, யேசுதாஸ் பாடிய “அம்மாவென்றழைக்காத உயிர் இல்லையே?” பலரின் மனதில் பசுமையாய்ப் இன்றும் பதிந்து கிடக்கிறதே?

ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது கவிஞர் வாலி எழுதிய கவிதையை பலரின் மனதை தொட்டது.

மரபு வழியில் – ஒரு
மராட்டி
எனினும் ரஜினியை
“என் மகனே,’ என்று
தழுவிக்கொண்டாள்
தமிழ்த்தாய் என்னும்
பிராட்டி!

முன்பு நிகழ்ந்த ஒரு விழாவில் கவிஞர் வாலி “எனக்கு இன்று இருக்கும் பணம், வசதிகள் அனைத்தும் எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட பிச்சையே. அவரால்தான், சோற்றுக்கே வழியில்லாமல் இருந்தவன். சோறு திண்ணவே நேரம் இல்லாதவன் ஆனேன்” என்று பேசியவர் மறைந்த நாளின்று.

மேலும் பல...

0 comments

Blog Archive