``பானி பூரியில இதெல்லாமா சேர்க்கிறாங்க?’’ - அதிரவைத்த புகார், அலறவைத்த ரெய்டு

வட இந்தியாதான் பூர்வீகம். ஆனாலும், தமிழகத்தில் பலராலும் தவிர்க்க முடியாத நொறுக்குத்தீனி பானி பூரி. இந்த `கரகர’ ஸ்நாக்ஸ், குழந்தைகள் முதல் ப...

வட இந்தியாதான் பூர்வீகம். ஆனாலும், தமிழகத்தில் பலராலும் தவிர்க்க முடியாத நொறுக்குத்தீனி பானி பூரி. இந்த `கரகர’ ஸ்நாக்ஸ், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஃபேவரைட். சென்னையின் முட்டுச்சந்தில்கூட குட்டி வண்டியில் பானிபூரி வியாபாரம் படுஜோராக நடந்துகொண்டிருக்க, அண்மையில் வாட்ஸ்அப்பில் வந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு தகவலும், அதற்காக உணவுப் பாதுகாப்புத்துறை எடுத்த நடவடிக்கையும் பானி பூரி பிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. 

சென்னையிலிருக்கும் உணவுப் பாதுகாப்பு அலுவலகத்தின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்தது அந்தப் புகார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல் இதுதான்... `பெரும்பாலான கடைகளில் விற்கப்படும் பானிபூரிகளில் பான் மசாலா கலந்தது போன்ற சுவையும் மணமும் இருக்கிறது.’

நம் அன்றாட நொறுக்குத்தீனிகளில் ஒன்றாகிவிட்டது பானி பூரி. குழந்தைகளையும் இளம் வயதினரையும் அதன் சுவைக்கு அடிமையாக்கும் நோக்கத்தில், பான் மசாலா சேர்க்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல இடங்களுக்கும் நேரில் சென்று சோதனை நடத்திவருகிறார்கள்.

பான் மசாலா சேர்த்தால் என்னென்ன பிரச்னைகள் வரும்? போதை மறுவாழ்வு மருத்துவர் அனிதா ராவிடம் பேசினோம்.

``பானி பூரியில் பான் மசாலா சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. அதை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்தான்அனிதா ராவ் உறுதிசெய்ய வேண்டும். அதேபோல, இதுவரை சிகரெட், பீடி, புகையிலை போன்றவற்றுக்கு அடிமையானவர்களைப்போல, 'பானி பூரி அடிக்‌ஷன்' என்பதற்காக யாரும் சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை. ஒருவேளை அப்படி பான் மசாலா சேர்த்திருந்தால், அது கண்டிப்பாக, பானி பூரிக்கு அடிமையாக்கும் நோக்கத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம். பான் மசாலாவும் ஒருவகைப் புகையிலைப் பொருள்தான் என்பதால், புகையிலை (Tobacco) ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய் போன்ற பல பிரச்னைகளுக்கு உள்ளாக நேரிடும். இது உண்மையெனத் தெரியும் பட்சத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்கிறார்.

இது குறித்து, உணவுப் பாதுகாப்பு அலுவலக எண்ணைத் தொடர்புகொண்டு பேசினோம்.

``பானி பூரியில் வட மாநிலத்தவர்கள் சிலர் பயன்படுத்தும் `மாவா’ போன்ற பான் மசாலாப் பொருள்கள் சேர்க்கப்படுவதாக புகார் வந்தது உண்மைதான். இந்தப் புகாரின் அடிப்படையில்தான் உணவுப் பாதுகாப்புத்துறை கமிஷனர் அமுதா தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டது. சென்னையில் சௌகார்பேட்டை, புரசைவாக்கம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 22 பேர் 5 குழுக்களாகச் சென்று சோதனை நடத்தினார்கள். சோதனையின்போது பூரி, புதினா தண்ணீர், சாஸ், சமோசா... இவற்றைப் பொரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் எண்ணெயின் தரம்... என அனைத்தும் சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றனவா எனச் சோதிக்கப்பட்டது. கசடு தங்கிய நிலையில் காணப்பட்ட புதினா தண்ணீர் உள்ளிட்ட சில கண்டுபிடிக்கப்பட்டு கால்வாயில் கொட்டி அழிக்கப்பட்டன.

தெருவோர கடை

அதேபோல, தங்களுடைய பகுதியில் இதேபோல சுகாதாரமற்ற நிலையில் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டால், தயங்காமல், '9444042322' என்ற உணவுப் பாதுகாப்பு அலுவலக எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் அல்லது வாட்ஸ்அப்பிலும் தகவல் தெரிவிக்கலாம். அந்தத் தகவல்கள் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார் நம்மிடம் பேசிய அதிகாரி. 

பானி பூரி சாப்பிடுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன் சொல்கிறார்...

தாரிணி கிருஷ்ணன்``உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் மைதா, பேக்கிங் சோடா போன்றவைதான் பானி பூரி தயாரிக்கப் பயன்படுத்தும் முக்கிய மூலப்பொருள்களாக இருக்கின்றன. இவற்றைத் தொடர்ச்சியாக உணவில் சேர்த்துவந்தால் உடல் பருமன், சர்க்கரைநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன. அந்த பூரியில் சத்துகள் பெரிதாக இல்லை என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், அதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரே எந்த அளவுக்குச் சுத்தமாக இருக்கும் என்பது கேள்விக்குறி. அதேபோல, கடைக்காரர்கள்,அந்த பூரியைப் பெரும்பாலும் தங்கள் கை விரல்களால் உடைக்கிறார்கள்; அதற்குள் மசாலாவை வைத்து, பானியில் முக்கித் தருகிறார்கள். அதனால், அவர்களின் கை விரல்களின் நகத்தில் படிந்துள்ள அழுக்குகளும் கையில் உள்ள அழுக்கும் பானியிலும் ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பும் உண்டு. சுத்தம் இல்லாமல் பரிமாறப்படும் அதைச் சாப்பிடுவது, வாந்தி, வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தலாம். இது போன்ற சாலையோரக் கடைகளில், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிட்டால் ஹெபடைடிஸ் ஏ தொற்று, டைஃபாய்டு காய்ச்சல் போன்றவை ஏற்படும் அபாயமும் இருக்கிறது. 

இது நம் மக்களின் பாரம்பர்ய உணவே அல்ல. எனவே, ஆசைக்காகச் சாப்பிட்டால்கூட என்றைக்காவது ஒருநாள் சாப்பிடலாம். அதுவும், முடிந்தவரை சுகாதாரமான தண்ணீர், ஆரோக்கியமான உணவுப் பொருள்களைக்கொண்டு தயாரிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்துகொண்டு சாப்பிடுவது அல்லது வீட்டிலேயே செய்து சாப்பிடுவது சிறந்தது.’’ என்கிறார் .

மேலும் பல...

0 comments

Blog Archive