துரை சிங்கம் vs நாச்சியார்... ரெண்டு போலீஸுக்கும் 6 வித்தியாசம்..!

பாலா இயக்கத்தில் ஜோதிகா போலீஸாக நடித்து வெளிவந்திருக்கும் ’நாச்சியார்’, பல நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. முதல் முறையாக போலீஸ் கதாபாத...

பாலா இயக்கத்தில் ஜோதிகா போலீஸாக நடித்து வெளிவந்திருக்கும் ’நாச்சியார்’, பல நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோதிகா, பலரின் லைக்ஸை வாங்கியுள்ளார். ஜோதிகாவை போலீஸ் உடையில் பார்த்தவுடன், மனதிற்குள் துரை சிங்கம் வந்து போவதைத் தவிர்க்க முடியாததால், துரை சிங்கத்துக்கும் நாச்சியாருக்கும் என்னென்ன வித்தியாசங்கள் என்று ஆராய ஆரம்பித்தோம். அதன் விளைவே இந்தக் கட்டுரை...

விசாரிக்கும் முறை:

சிங்கத்திடம் ஒன்றரை டன் வேகம் இருந்தாலும் அவரது விசாரணையில் ஒரு நிதானம் இருக்கும். இவர்தான் குற்றவாளி என்று ஊரே சொன்னாலும், தகுந்த ஆதாரங்கள் கிடைக்கும்வரை குற்றவாளியைக் கைது செய்யவோ, அடிக்கவோ மாட்டார். சிங்கம் படத்தின் இரண்டாவது பாகத்தில் NCC வாத்தியாராக பல மாதங்கள் வேலை செய்து குற்றவாளிகளைக் கைது செய்வார். இந்த நிதானம் கொஞ்சமும் இல்லாத ஆள் நாச்சியார். ’நான் அடிச்சிட்டுத்தான் விசாரிப்பேன்’ என ட்ரெய்லரிலேயே ஒரு வசனம் வருகிறது. படத்திலும் அப்படித்தான். அவர் யாரெல்லாம் சந்தேகப்படுகிறாரோ அவர்களையெல்லாம் தலைகீழாகத் தொங்கவிட்டு அடிப்பார்.

வசனம்:

என்னதான் சிங்கம் நிதானமான ஆளாக இருந்தாலும், அவர் நிதானமான பேச மாட்டார். ஹை டெசிபலில் பல பக்கங்களுக்கு வசனம் பேசுவார். ஆனால், நாச்சியார் அப்படி இல்லை. சில இடங்களில் சத்தமாகவும், சில இடங்களில் திமிராகவும், சில இடங்களில் நிதானமாகவும் பேசும் நாச்சியார், எப்போதுமே அதிகமாகப் பேச மாட்டார். ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது போல், சில வார்த்தைகளே அவரது வாயில் இருந்து விழும்.

குடும்பத்தோடு நெருக்கம்:

வேலையில் எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் அதை வாசலில் செருப்புடன் சேர்த்துக் கழற்றிவிட்டு வீட்டிற்குள் வர வேண்டும் என்பது சிங்கத்தின் பாலிஸி. நாளை ஆப்பிரிக்காவுக்குப் போய் குற்றவாளியை அரெஸ்ட் செய்ய வேண்டிய வேலையிருந்தாலும், இன்று குடும்பத்தோடு ஜாலியாக இருப்பார். ஆனால், நாச்சியார் இதற்கு நேரெதிர். படத்தில் ஜோதிகாவின் கணவராக வருபவர், ‘நீ அப்படி பார்க்காத. நீ பார்க்குறதே மொறைக்கிற மாதிரி இருக்கு’ என்பார். இந்த வசனத்தைவிட வேறு விளக்கம் வேண்டுமா என்ன..?

போலீஸ் உடையில் நேர்த்தி:

துரை சிங்கமும் நாச்சியாரும் போலீஸ் வேலையில் கடமை மாறாமல் இருந்தாலும், சிங்கத்திடம் இருக்கும் நேர்த்தி நாச்சியாருக்கு இல்லை. தன்னுடைய ஸ்டேஷனுக்குப் போகும்போதும் சிங்கம் கம்பீரமாகத்தான் செல்வார். ஆனால், உயர் அதிகாரியைப் பார்க்கச் சென்றாலும் நாச்சியார் தொப்பி போடாமல் செல்வார். சிங்கத்திற்கு எல்லா விஷயங்களும் முழுமையாகவும் பக்காவாகவும் இருக்க வேண்டும்; அது உடை என்றாலும் அதே ரூல்தான். ஆனால், நாச்சியார் இதில் அவ்வளவு கவனம் செலுத்துபவர் இல்லை.

அடிக்கிற ஸ்டைல்:

சிங்கம், பக்கா கமர்ஷியல் டைப். அவர் அடிக்கிற ஸ்டைலும் அப்படித்தான் இருக்கும். அவர் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் எடை இருக்கும் என்பதை சிங்கம் 3 படத்தில் மெசின் வைத்தே காட்டி விடுவார்கள். ஆனால், நாச்சியார் யதார்த்தமான ஆள். அவர் அடிக்கிற ஸ்டைலும் அப்படித்தான் இருக்கும். நாச்சியார் படத்தில் வில்லனை அடிக்கும்போது, தன் கையும் வலிப்பதுபோல் ஒரு முகபாவனை கொடுப்பார். இந்த யதார்த்தம் சிங்கத்திடம் கிடையாது.

சட்டத்தை மதித்தல்:

எவ்வளவு பெரிய குற்றம் செய்திருந்தாலும், பல நாள்களாக போலீஸுக்குத் தண்ணிகாட்டிய குற்றவாளியாக இருந்தாலும், குற்றவாளியைப் பிடிப்பதற்காக இந்தியப் பெருங்கடல் வரைக்கும் சென்றுவந்தாலும், சிங்கம் அவனைக் கைது செய்து சிறையில்தான் அடைப்பார். ஒருபோதும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ள மாட்டார். ஆனால், நாச்சியார் குற்றவாளியைக் குப்பை மேட்டில் வைத்து... (சரி விடுங்க, இதைச் சொன்னா ஸ்பாய்லர்னு சொல்லிடுவாங்க)

இந்த மாதிரியான வித்தியாசங்கள் உங்களுக்குத் தோன்றினால் அதை மறக்காமல் கமென்ட் செய்யுங்கள் பாஸ்...

மேலும் பல...

0 comments

Blog Archive