பன்றி அளவில் இருந்த யானைகளை பிரமாண்டமாக்கிய பரிணாம வளர்ச்சி... எப்படி நடந்தது?

 யானைப்படை இருந்தால் யாரையும் வெல்லலாம். ஆனால், இன்றைய சூழலில் அத்தகைய யானைகளின் இறப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்திய நிலப்பரப்பில் அதன் எ...

 யானைப்படை இருந்தால் யாரையும் வெல்லலாம். ஆனால், இன்றைய சூழலில் அத்தகைய யானைகளின் இறப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்திய நிலப்பரப்பில் அதன் எண்ணிக்கை குறைவு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், வேதனைகளை ஒதுக்கிவிட்டு அவற்றின் பாதுகாப்பிற்கான தேவையைக் கவனிக்க வேண்டிய அவசியத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு பிரச்னையும் அதன் வரலாறு அறியப்படாதவரை அதைப் பற்றியதான புரிதல் முழுமை அடைவதில்லை. அவ்வகையில் யானைகள் தோன்றிய காலம், அதன் பரிணாம வளர்ச்சி பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

யானைகள்

இந்தியாவில் தற்போது வாழக்கூடிய ஆசிய யானைகளின் மூதாதையர்களாக மோரித்தீரியம் (Moeritherium) என்ற விலங்கு கூறப்படுகிறது. இது பன்றி உருவிலும், அதே உயரத்திலும் வாழ்ந்தவை. ஈயோசீன் (Eocene) காலத்திற்கு முன்னதாகத் தோன்றிய இவ்வுயிரினம் அக்காலத்தில்தான் பரிணாம வளர்ச்சி அடையத் தொடங்கி ஆலிகோசீன் (Oligocene)காலத்தில் அளவில் பெரிய யானை இனமாக உருவெடுத்தன. இந்த மோரித்தீரியம் என்ற இனத்திலிருந்து பல இனங்கள் பரிணாம வளர்ச்சியடைந்து, பின் வந்த ஐந்து பெரிய உயிரழிவுகளில் (Major Extinctions) அழிந்தும் போயிருக்கிறது.

கடைசியாக அழிந்த பேரானை இனமான மம்மூத் (Mammoth) உட்பட, இன்று இருக்கும் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானை இனங்களுக்கும் இதுதான் மூதாதையர் என்று சொல்லப்படுகிறது. இந்த மூன்று இனங்களும் பரிணாம வளர்ச்சியடைந்தது ஆப்பிரிக்காவில். அங்கே தோன்றிய யானைகள் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசிய கண்டத்திற்கு பரவியதற்கு நிலவழித் தொடர்புக்கான அடையாளங்கள் இன்றளவும் இருக்கின்றன. நிலவழித் தொடர்பு அறுந்துபோன பகுதிகள் எதிலேனும் யானைகளின் பரவல் இருக்கிறதா என்றால், இருக்கிறது. போர்னியோ (Borneo) தீவுகளில் யானைகள் இருக்கின்றன. யானைகள் நன்றாக நீந்தக்கூடிய உயிரினம். பிறந்தவுடன் நீரில், கடலில் நன்றாக நீந்தக்கூடியது யானை. தும்பிக்கை உட்பட உடற்பகுதி அனைத்தையும் பயன்படுத்தி மிக அருமையாக நீந்தும். இதற்குக் காரணமாக மோரித்தீரியம் ஆதியில் நீர்வாழ் உயிரினமாக வாழ்ந்திருக்க வேண்டும் என்று அறியப்படுகிறது. யானைகளின் உடலில் விதைப்பை கிடையாது. அது அதன் வயிற்றுக்குள் இருக்கும். கடல்வாழ் உயிரினங்களுக்கும் அப்படித்தான். கடலில் தட்பவெப்பநிலை மாற்றம் அதிகம். நீரோட்டம் வெதுவெதுப்பாக இருக்கும், அருகிலேயே குளிர்நீரோட்டம் இருக்கும். இவ்வாறு வெப்பநிலையில் உடனடி மாறுதல் ஏற்படும்போது விதைப்பை வெளியே இருந்தால் உயிரணு உற்பத்தி பாதிக்கப்படும். விதைப்பையின் முக்கியமான வேலையே உயிரணு உற்பத்தி சீராக இருப்பதற்கு ஏற்ப முப்பது டிகிரியிலேயே வெப்பநிலையை வைப்பது. அதனால்தான் கடல்வாழ் உயிரிகளுக்கு விதைப்பை வயிற்றினுள் உள்ளது. இதனால் யானைகள் நீர்வாழ் உயிரினமாக இருந்திருக்குமென்று கருதப்படுகிறது.

மம்மூத் என்ற பேரானை சமீபத்தில் அழிந்துபோன பேருயிர். யானைகளைப் போல் மோரித்தீரியத்திலிருந்து பிரிந்து வந்தது. அவை அழிந்ததற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உண்டு. ஒன்று அதிகளவு வேட்டை, அது வாழ்ந்த பகுதிகளில் மனிதர்களின் நாகரிக வளர்ச்சி அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் அதை உணவாகப் பார்த்தார்கள். இன்னொரு காரணம், அவற்றை அழிப்பதை வீரத்திற்கான அடையாளமாகக் கருதி வேகமாக அழித்தார்கள்.

காலப்போக்கில் யானைகளைப் பிடித்து போர் மற்றும் மற்ற பயன்பாடுகளுக்கு மாற்றுவது என நிகழ்ந்துள்ளது. அவற்றில் தந்தம் உள்ள யானைகளுக்கு முக்கியத்துவம் அதிகம். வெள்ளைத் தங்கம் என்று குறிப்பிடக்கூடிய அளவிற்குத் தந்தத்திற்கு முக்கியத்துவம் இருந்திருக்கிறது. வெட்பாலை எனப்படும் ஐவரி (Ivory) என்ற பொருள் தந்தத்தில் அதிகமாக இருக்கிறது. அதனால் யானை அதிகமாக வேட்டையாடப்படுகிறது. அனைத்து யானைகளுக்கும் தந்தம் இருக்கிறதா என்றால், இல்லை. ஆசியாவில் பெண் யானைகளுக்குத் தந்தம் இல்லை. ஆப்பிரிக்காவில் ஆண், பெண் இரண்டு பாலினங்களுக்கும் தந்தம் உண்டு. தந்தம் இல்லாத ஆண் யானைகளும் உண்டு. அவை, மோழைகள் என்றழைக்கப்படுகின்றன. சிலர் இம்மோழைகளைப் பற்றி தவறான எண்ணம் கொண்டுள்ளார்கள். இவை ஆண்மையற்றவையாகக் கருதப்படுகின்றன. ஆனால், மோழைகளும் ஆண்மைத்தன்மை மிகுந்தவைதான். அழகுப் பொருட்கள், கலைப் பொருட்கள் என்று பல தேவைகளுக்குத் தந்தம் தேடி யானைகள் வேட்டையாடப் படுகின்றன. ஆகையால் சூழ்நிலைக்கும் தனது பாதுகாப்பிற்கும் ஏற்ப தந்தமின்றி பிறப்பதாகக் கருதப்படுகிறது. அத்தோடு மோழைகளோடு இனப்பெருக்கம் செய்ய பெண் யானைகளுக்கு வாய்ப்புகள் அதிகம் அமைகிறது. இதை அவற்றின் பாதுகாப்பிற்கு ஆரோக்கியமானதாகவே கருதுகின்றன.

பரிணாம வளர்ச்சி

தலைமை உயிரினங்கள், குடையுயிரிகள், மறைதிறவுச் சிற்றினங்கள் என்று கானுயிர்களை மூன்று வகைகளில் குறிப்பிடலாம். காட்டின் வளமைக்கு இவை அனைத்துமே முக்கியப் பங்காற்றுகின்றன. ஆனால், ஓர் உயிரைத் தேர்வு செய்து பாதுகாத்தால் அதைத் தொடர்ந்து பல உயிர்கள் நமது முயற்சி இல்லாமலே காக்கப்படும். அப்படிப்பட்ட உயிரினங்களை குடையுயிரிகள் எனலாம். யானையும் ஒரு குடையுயிரிதான். யானைகள் செல்லும் வழிகளில் நீர்வழிகள் தோன்றும், கானகம் செழிக்கும். பல்லுயிர்ச்சூழல் பெருகும்.

ஆப்பிரிக்கக் காடுகளில் ஆண்டொன்றுக்கு கிட்டதட்ட 30,000 யானைகள் கொல்லப்படுகின்றன. இந்தியாவில் தற்போது மொத்தம் இருப்பதே 50,000 யானைகள்தான். வேட்டை மட்டுமின்றி காடுகள் துண்டாடப்படுவதும் இவற்றின் அழிவுக்கு முக்கியக் காரணம். காடுகள் துண்டாடப்படுவது நம் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடப்பதால் அங்குள்ள உயிர்கள் வெளியே செல்ல இயலாது நெருங்கிய சொந்தங்களோடு இனப்பெருக்கம் செய்வதால் மரபணு வேறுபாடு (Genetic Diversity) குறைந்து நோய் எதிர்ப்புத் திறனை இழக்கின்றன. இதனால் கொள்ளை நோய், தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டும் யானைகள் இறக்கின்றன. இத்தகைய பரிதாபகரமான நிலை கிர் காட்டில் வாழும் சிங்கங்களுக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பல்லுயிர்ச் சூழல் பெருகி காடுகள் வளமை பெற்று இயற்கை செழிப்பதற்கு பேருயிர் பாதுகாப்பு அவசியம். அந்த வகையில் ஆதியிலிருந்து வாழ்ந்து வரும் யானைகள் நம் காலத்தில் அழிந்துவிட்டது, அதுவும் நம்மால் அழிந்துவிட்டது என்ற அவப்பெயர் மனித இனத்தைச் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை. இயற்கை அன்னையின் படைப்பில் இலைகள் தொடங்கி இன்று அவளையே அழித்துக்கொண்டிருக்கும் மனிதன் வரை அனைத்துமே அதிசயம்தாம். அனுதினமும் அதிசயம் புரியும் அவளை மண்டியிட்டு வணங்குவதை விட்டுவிட்டு மடியினைச் சுரண்டும் நாம் நிச்சயம் மூடர்கள்தாம். கார்பனற்ற காற்று வேண்டுமெனில் காடுகள் காக்கப்பட வேண்டும். காடுகளைக் காக்க கானுயிர்கள் கவனிக்கப்பட வேண்டும்.

மேலும் பல...

0 comments

Blog Archive