விஸ்வரூபம்-2 திரை விமர்சனம் - கொஞ்சமும் ஏமாற்றாமல் இரண்டாம் பாகத்திலும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.

விஸ்வரூபம் 2013ம் ஆண்டு பல தடைகளை உடைத்து வெளிவந்த கமல்ஹாசன் படம். ஹாலிவுட் தரம் என்று பேச்சுக்கு இல்லாமல் உண்மையாகவே ஒரு ஹாலிவுட் படத்தை ப...

விஸ்வரூபம் 2013ம் ஆண்டு பல தடைகளை உடைத்து வெளிவந்த கமல்ஹாசன் படம். ஹாலிவுட் தரம் என்று பேச்சுக்கு இல்லாமல் உண்மையாகவே ஒரு ஹாலிவுட் படத்தை பார்த்த அனுபவத்தை கொடுத்த கமல், முதல் பாகத்தில் பல கேள்விகளுக்கு விடை தராமல் முடித்திருப்பார், குறிப்பாக இந்த போர் நிற்க வேண்டும் என்றால் நான் சாக வேண்டும் அல்லது உமர் சாக வேண்டும் என்பார், போர் நின்றதா? பார்ப்போம்.

கதைக்களம்

படம் முதல் பாகத்தின் சில காட்சிகளை காட்டிவிட்டு படம் முழுவதும் முதல்பாகத்துக்கு முந்தைய காட்சிகளும், தற்போதைய காட்சிகளும் மாறி மாறி வருகின்றன.

முதல்பாதியில் கமல் எப்படி தீவிரவாதிகள் குருப்பில் இணைந்தார் என்பது தெளிவாக இருக்காது.

படம் தொடங்கியதுமே கமல், பூஜாகுமார், ஆண்ட்ரியா அனைவரும் லண்டன் புறப்பட்டு செல்கின்றனர். அப்போது கமல் முன்பு நடந்ததை நினைத்து பார்க்கிறார். ராணுவத்தில் ஆண்ட்ரியாவுக்கு உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார் கமல். அப்போது அவருடன் காதல் செய்கிறார். அவருடன் தனியறைக்கு போவதுபோல நடிக்க இதனால் ராணுவத்திலிருந்து நீக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறார்.

இதனையடுத்து அங்கிருந்து தப்புவதுபோல ஆப்கானிஸ்தானுக்கு தேடப்படும் குற்றவாளியாக செல்கிறார். அதன்பின் அங்கு வில்லன் உமருடன் அவர் செய்வதை முதல்பாகத்திலேயே பார்த்திருப்போம்.

பின்னர் உமர்க்கு உண்மை தெரிந்து அவர் அங்கிருந்து தப்பிய கதை எல்லாம் வருகிறது. நிகழ்காலத்தில் லண்டனுக்கு நேரவிருக்கும் பெரிய பேராபத்தை தடுக்கிறார். இதையடுத்து உமரின் மற்ற சதியை முறியடித்து அவரை கொன்றாரா என்பதே மீதிகதை.

படத்தை பற்றிய அலசல்

படம் முழுவதும் தேசப்பற்றை வெவ்வேறு வடிவங்களில் காட்டுகிறது. படத்தில் முதல் பாடலே ராணுவத்தில் நடக்கும் பயற்சியுடன் கமல் செய்யும் ரொமான்ஸும் தான். பல இடங்களில் குறிப்பிட்ட சாதியினர் தான் உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறார். அவாளை கலாய்க்கவும் செய்கிறார்.

சண்டைக்காட்சிகளுக்கு குறைவேயில்லை. முழுவதும் நிரம்பியிருக்கிறது. முதல் பாகத்தில் வந்த டிரான்ஸ்பமேஸன் சண்டையை மீண்டும் முயற்சி செய்துள்ளனர். டெக்னிக்கலாகவும் பல இடங்களில் Freezing Shot, ரிவர்ஸில் சென்று ஸ்லோமோஷனில் காட்டுவது என அசத்தியுள்ளனர்.

கமர்சியல் விஷயங்கள் அதிகமாக இல்லை. பாடல்களும் பெரியளவில் தொந்தரவாக அமையவில்லை. ஓரளவு சரியான இடத்திலேயே பொருந்துகிறது. அம்மாவாக நடித்தவர் பிரமாதம். நானாகிய நதிமூலமே என்ற அந்த பாடல் கொஞ்சம் எமோஷ்னலாகவே இருந்தது.

பாடல்கள் மனதில் நிற்கவில்லையென்றாலும் பின்னணி இசையில் அசத்தியுள்ளார் ஜிப்ரான். ஆனாலும் ஞாபகம் வருவதால் முதல் பாகத்திலிருந்த விறுவிறுப்பு ஏனோ மிஸ்ஸிங்.

நடிப்பை பொறுத்தவரையில் கமலைப்பற்றி சொல்லவே தேவையில்லை. மனுஷன் எல்லாகாட்சிகளிலும் பின்னுகிறார். ஆண்ட்ரியாவும் சண்டைக்காட்சியிலும் அசத்துகிறார். கடைசியில் இவரின் முடிவு கொஞ்சம் சோகத்தை ஏற்படுத்துகிறது. பூஜாகுமார் முதல் பாகத்தைவிட இதில் படம் முழுவதும் டிராவல் ஆகிறார். ரொமான்ஸ் காட்சியில் ஸ்கோர் செய்கிறார்.

வில்லனாக வந்த ராகுல்போஸ் இரண்டாம் பாதியில் தான் அவரின் காட்சி அதிகமாக வருகிறது. வில்லத்தனமும் புதுமையாக இருக்கிறது.

வசனத்திலும் உலகநாயகன் அசத்துகிறார். எதிரியின் கண்ணை பார்த்து அவன் சாவதை பார்த்துக்கொண்டே தான் சாகனும். எந்த மதமாக இருந்தாலும் தேசப்பற்று இருப்பது தான் முக்கியம் என்கிறார்.

மேலும் உயர் அதிகாரியாக வரும் சேகர் கபூர், லண்டன் ஆசாமி, சில நிமிடங்களே வரும் ஆண்ட்ரியாவின் அப்பா கதாபாத்திரம் என மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாகவே செய்துள்ளனர்.

க்ளாப்ஸ்

படத்தில் சண்டைக்காட்சிகள் அசத்தலாக உள்ளது. ஹாலிவுட் தரத்திலான பல காட்சிகள்.

பின்னணி இசையும், ஒளிப்பதிவும் மிரட்டல்

கமல், ஆண்ட்ரியா, பூஜாகுமார், ராகுல் போஸ் என ஒவ்வொருவரின் நடிப்பும்

லண்டனில் டெல்லியை சேர்ந்த ஷேஷாத்திரியுடனான உரையாடல்

பல்ப்ஸ்

படத்தில் சில காட்சிகளில் கிராபிக்ஸ் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். 5 வருட இடைவெளியும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அடித்தட்டு மக்களுக்கு இன்னும் ஒரு சில காட்சிகள் புரியாமல் இருக்குமோ என்று தோன்றுகிறது.

மொத்தத்தில் முதல் பாகத்தை எதிர்பார்த்து வந்தவர்களை கொஞ்சமும் ஏமாற்றாமல் இரண்டாம் பாகத்திலும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.

மேலும் பல...

0 comments

Blog Archive